கெஹெலிய ரம்புக்வெலவை வாக்குமூலம் வழங்க உத்தரவு!

1 Min Read

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (31) ஆஜராகுமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு வருகை தராமைக்கு முன்வைத்த காரணம் பொய்யானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரச செலவு முகாமைத்துவ அமைச்சு உப குழுக் கூட்டத்தில் அமைச்சர் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை என அதன் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நாளை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.